சர்வதேச நீதியை தாமதப்படுத்துவதானது நீதியை மறுப்பதற்கு சமமாகும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘2009 ஆம் ஆண்டு யுத்தத்தின்போது நான் முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்தேன். நான் இன்னும் இலங்கை இராணுவத்தினால் பஸ்ஸில் ஏற்றுக் கொண்டு செல்லப்பட்ட என்னுடைய கணவரை தேடிக் கொண்டிருக்கின்றேன். அவர் ஒரு அரசியல் தலைவர்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையானது அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை எடுத்து கூறுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு அரசியல் கைதியை மாத்திரம் விடுவித்துள்ளார். ஏனையவர்களை விடுவிக்கவில்லை. காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை அவரால் கூற முடியவில்லை.
வடக்கு, கிழக்கில் அதிகளவான பெண்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தேடிக் கொண்டு இருக்கின்றனர். எமது கருத்து என்னவெனில் முறையான சர்வதேச குற்றவியல் விசாரணையின்றி இலங்கையின் இனப்படுகொலை விவகாரத்தை மாற்றியமைக்க முடியாது என்பதாகும்.
சர்வதேச நீதியை தாமதப்படுத்துவதானது நீதியை மறுப்பதற்கு சமமாகும். ஜெனீவா செயற்பாடுகளுடாக சர்வதேச நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். பாதிக்கப்பட்ட மக்களும் இதனை எதிர்பார்த்தனர்.
புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை வரும் இளைஞர், யுவதிகள் இராணுவக் கண்காணிப்புக்குட்படுத்தப்படுகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.