காணாமல் ஆக்கப்பட்டோர் பயங்கரவாதிகள் அல்ல!

Sandhya Ekneligodaவடக்கு-கிழக்கிலும் அதற்கு அப்பாலும் தமிழர் என்ற காரணத்தாலும், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகச் செயற்பட்டமைக்காகவும் பல ஆயிரக்கணக்கானவர்கள் இலங்கை அரச இயந்திரத்தால் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

வெள்ளை வாகனத்தால் கடத்தப்பட்டவர்களில் இருந்து, சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டடோரும் போரின் இறுதிக் கணங்களில் குடும்பங்களின் முன்னிலையில், இலங்கை இராணுவத்தால் விடுக்கப்பட்ட பகிரங்க அறிவிப்புக்கு அமைய அவர்களிடம் அமைதியாக கையளிக்கப்பட்ட எமது உறவுகள் வரை பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர்களாவர்.ஆனால், இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதிலை முன்வைக்கத் தயாரில்லை.
இலங்கை அரசு காலத்தை இழுத்தடித்தும், காணாமற் போனோர் என்று அத்தாட்சிகளை வழங்கி சிறிய உதவிகளைப் புரிந்து பூதாகாரமான இந்தப் பிரச்சினையை சிறிய பிரச்சனையாக மாற்றிவிடலாம் என்று நினைக்கிறது.
Ananthy Sasitharan in Press Conference at SLFI
இலங்கையின் நீதித்துறையும் இதற்கு நீதி வழங்கப்போவதில்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மன்னார் புதைகுழியில் இருந்து யாழ்ப்பாணம் வடமராட்சியின் பல்லப்பை வரை மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவற்றை விசாரிப்பதற்குப் பதிலாக இலங்கையின் காவற்துறையில் இருந்து கொழும்பை மையப்படுத்திய அரச கட்டமைப்பு எல்லாமே புறந்தள்ளும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதிகளும் காணாமற் போனோர் குறித்த விடயத்தில் நேரடிப் பொறுப்பாளிகள். ஏனென்றால் நிறைவேற்று அதிகாரங்களை தமது கைகளில் வைத்திருந்தவர்கள், வைத்திருப்பவர்கள்.
Anu Asha
இலங்கையின் ஜனாதிபதியே முப்படைகளின் தளபதி என்ற வகையில் இராணுவத்தின், காவற்படையின், ஊர்காவற்படையின், துணை இராணுவக்குழுக்களின் மற்றும் இந்தக்குழுக்களால் இயக்கப்படும் அடையாளம் தெரியாத குழுக்களாக இயங்கிய வெள்ளை வாகனக் கும்பல்களின் நடவடிக்கைகளுக்கும் இராணுவத்தின் தளபதியாகவும், ஒட்டுமொத்த நிறைவேற்று அதிகாரத்தின் அறுதியான பொறுப்பாளியாகவும் பொறுப்புக் கூறவேண்டியவராக ஜனாதிபதி அமைகிறார்.
ஈழத் தமிழர்கள் என்ற காரணத்தினாலும், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகக் குரல்கொடுத்தவர்கள், போராடியவர்கள் என்ற காரணத்தினாலும் காணாமற் போகச் செய்யப்பட்டவர்களுக்குக் கூட தமிழர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்துவதில் பலருக்கும் தயக்கம் இருக்கிறது.
at SLFI
இலங்கை அரசும் அதன் ஜனாதிபதியும் அரச படைகளும் ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள்.
இந்த அரச பயங்கரவாதம் ஓர் இன அழிப்புப் போரை நடாத்தியிருக்கிறது என்பது எந்தவிதமான ஐயத்திற்கும் அப்பாற்பட்ட உண்மை.
காணாமற் போனோர் ஆக்கப்பட்டதற்கு மட்டுமல்ல, இந்த விடயத்தையே மூடி மறைப்பதற்குப் பின்னணிக்காரணமாக இன அழிப்பை மறுத்தல், மறைத்தல் என்கின்ற நோக்கம் இருக்கிறது.
National Delegates' Conference of Affected Families
இலங்கையில் ஆறாம் சட்டத்திருத்தம் என்று ஒன்றைக் கொண்டுவந்து அரசியல் குரலை குற்றக் குரலாக்கிய இலங்கை அரசும், அரச பயங்கரவாதத்தைக் அரச பயங்கரவாதம் என்று கூறாமல் ஒரு பக்கச் சார்பாக தமிழர் தரப்பை மட்டும் பயங்கரவாதிகள் என்று பிரகடனம் செய்த வேறு நாடுகளளின் அரசுகள் அனைத்தும் இலங்கைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்புப் போரில் ஏதோ ஒரு விதத்தில் பங்கேற்று இருக்கிறார்கள்.
இதனால் தான் இலங்கை அரசு இன்றும் மூடி மறைக்க முற்படுகின்ற பூதாகாரமான இந்தப் பிரச்சனைக்கு சரியான சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட தீர்வை வழங்கத் திராணியற்றவர்களாக அவர்களும் சேர்ந்து மூடி மறைப்பு, இழுத்தடிப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
குற்றங்களுக்கு மட்டும் போர்க்குற்றம் என்று சொல்லைப் பயன்படுத்த முன்வந்த சர்வதேச சமூகம் இன்னும் சிறையில் வாடும் எமது கைதிகளைப் போர்க்கைதிகளாகப் பார்க்க மறுக்கிறதென்றால், சர்வதேச சட்டங்களிலும் அடிப்படையான குறைபாடுகள் இருக்கின்றதென்பதையே அது காட்டுகிறது.
National Delegates' Conference of Affected Families at Thulana, Kelaniya
சர்வதேசம் போர்க்கைதிகளாகப் பார்க்க மறுக்கும் போது, அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட அரச தரப்பு தமிழ்த்தரப்பின் கைதிகளை அரசியற் கைதிகளாகவும் பார்க்க மறுக்கிறது.
ஆகவே, காணாமற் போகச் செய்யப்பட்டோருக்கான போராட்டம் என்பது சர்வதேச அநீதிக்கு எதிரான போராட்டமாகும். அரச பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியற் போராட்டம் ஆகும். தமிழ் என்ற அடையாளத்தைக் கைவிட்டு இந்தப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட முடியாது. அது காணாமல் ஆக்கப்பட்ட உயிர்களுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகிவிடும்.
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் என்று தம்மைக் கூறிக்கொண்டு, பல நாடுகளின் அரசுகளின் மறைமுகமான நிதியோடு கையாளப்படுகின்ற அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு வேலைபார்க்கின்ற ஒரு தொழில் துறையாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரம் மாற்றப்பட்டிருக்கிறது கவலைக்குரியது. இது பல புதிய கேள்விகளை எழுப்புகிறது.
At Thulana-Kelaniya
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் இன்று நல்லிணக்கக் குழுவை இலங்கை அரசு சார்பாக இயக்குகிறார். இவரின் ஆட்சிக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும், குறிப்பாக செம்மணி, மன்னார் மனிதப் புதைகுழிகளில் தம் உறவுகள் கொல்லப்பட்டார்களா என்று இன்றும் அங்கலாய்க்கும் எமது உறவுகளுக்கு எந்தப் பதிலையும் அவர் சொல்வதற்குத் தயாராக இல்லை. மனிதப் புதைகுழிகளில் பலியானவர்களை அடையாளப்படுத்துவதற்கு இதுவரையும் இவர் எதையும் செய்யவில்லை.
1983 இல் இலங்கைத் தீவில் யூ.என்.பி அரசின் காலத்தில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிராக அரச அனுசரணையோடு நடைபெற்ற இன ரீதியான படுகொலைகளுக்கு 2004 ஆம் ஆண்டில் காலந்ததாழ்த்திய மன்னிப்பைக் கோரிய சந்திரிக்கா குமாரதுங்க தனது மன்னிப்புக் கோரும் உரையில் 1983 இல் இங்கு நடந்ததை ஜேர்மனியில் நடந்ததோடு ஒப்பிட்டார்.
at Thulana
I believe honestly that what happened in 1983, the attitudes that led up to it, and the consequences are similar to what Germany suffered in the 1930’s and 40’s என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரின் காலத்தில் நடந்தேறிய குரூரமான கொடுமைகளுக்கு ஒரு முன்னாள் ஜனாதிபதியாக அவர்  12 ஆண்டுகள் கழிந்தபின் இன்னும் பொறுப்புக் கூறுவதற்கு தயாராகவில்லை என்றால், இதைவிட  இலங்கைத் தீவில் நல்லிணக்கம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் அரசியலுக்கு வேறு உதாரணம் எதுவும் தேவையில்லை.
ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மட்டுமல்ல, தனது கணவனைத் துப்பாக்கி ரவைகளுக்குப் பலிகொடுத்த ஒரு சிங்களப் பெண்ணுக்கு தனது கணவனை இலங்கை இராணுவத்திடம் கையளித்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருக்கு ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் அவருக்கு நான் சொல்லவிரும்புகின்ற செய்தியும் இதுவே.
உண்மையில் நல்லிணக்கத்தை நாடுவதாக இலங்கை அரசு இனியாவது மாறவேண்டும் என்று விரும்பினால், தற்கால அல்லது முன்னாள் அரச தலைவர்கள் அவ்வாறு தாம் முன்மாதிரியாக மாறவேண்டும் என்று உண்மையாக விரும்பினால், இங்கே நடாத்தப்பட்ட இன அழிப்புப் போரை மனிதாபிமான யுத்தம் என்று வருணிப்பதற்குப் பதிலாக, இங்கே தமிழர்கள் நடாத்தியது ஒரு விடுதலைப் போராட்டம், அதிலே பங்கேற்றவர்கள் அனைவரும் விடுதலைப் போராளிகள் என்று எதுவிதமான கூச்சமும் இல்லாமல் அங்கீகரிக்கவேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பயங்கரவாதிகள் அல்ல என்ற நிலையில் இருந்தே காணாமல்  ஆக்கப்பட்டோர் உறவுகளாகிய  நங்கள் நல்லிணக்கத்தை ஆரம்பிக்க முடியும்.
இலங்கைத் தீவில் நடந்ததைப் போன்று உங்கள் நாடுகளில் நடந்ததாகி விடுதலைப் போராட்டங்கள் என்றும் , விடுதலைப் போராளிகள் என்றும் அங்கீகரித்து உங்கள் நாடுகளில் நீங்கள் கடைபிடிக்கும் நல்லிணக்கத்தை இலங்கை அரசுக்குப் போதிக்காமல் மாறாக எங்களை மாறுங்கள் என்று நிர்பந்திப்பவர்களுக்கும் இதையே நங்கள் சொல்ல முடியும்.
ஆளவே சிவில் சமூகமாக இருப்பினும், தனி மனித சுதந்திரத்தைப் பற்றி பேசுபவர்களாக இருப்பினும் , சர்வதேச சட்டங்களை பற்றி பேசுபவர்காளாக இருப்பினும், மனித உரிமை என்பது கூட்டு உரிமை என்பதையும் அந்தக் கூட்டு வறுமையில் சமத்துவம் எவ்வாறு முக்கியமானது என்பதையும் அங்கீகரித்தவாறு முன்னோக்கிச் செல்லாத தயாராக வேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila