வடமராட்சி கிழக்கினில் முன்னெடுக்கும் படையினரது கட்டுமானப்பணிகள் தொடர்பினில் அறிக்கையிட முற்பட்ட யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் சிலர்டி இலங்கை இராணுவப்புலனாய்வுப்பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பினில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
வடக்கினில் அனைத்து தொழில்களிலும் தலையை நுழைத்துக்கொண்டுள்ள இலங்கை படைகள் தற்போது கட்டட ஒப்பந்த வேலைகளிலும் குதித்துள்ளன.மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் தற்போது சுகாதார அமைச்சின் கட்டட நிர்மாண ஒப்பந்தங்கள் படைத்தரப்பின் பொறியியல் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுவருகின்றது.அக்கட்டுமானப்பணிகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுவருவதால் உள்ளுர் மேசன் மற்றும் கூலித்தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துவருகின்றனர்.அவ்வாறு படையினரால் ஊர்காவல்துறையினில் கட்டிமுடிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் கட்டடம் ஒன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவினால் அண்மையினில் திறந்தும் வைக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவங்கள் தொடர்பினில் செய்தி அறிக்கையிட ஊடகவியலாளர்கள் சிலர் மருதங்கேணி பகுதிக்கு அண்மையினில் விஜயம் செய்திருந்ததுடன் படையினர் கட்டுமானப்பணிகளினில் ஈடுபட்டுள்ளதனையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.இதனை அவதானித்த படையினர் வழங்கிய தகவலையடுத்து யாழ்.நகர் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை ஏ-9வீதியினில் வழிமறித்த இராணுவப்புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தியுள்ளனர்.அத்துடன் அவர்கள் தொடர்பான தகவல்களை துருவி துருவி கோரியுமுள்ளனர்.
ஊடக சுதந்திரம் திரும்பிவிட்டது,வெள்ளை வான் கடத்தல்கள்,காணாமல் போதல்கள் இல்லையென இலங்கை அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் நிலையினில் ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டமை கண்டிக்கத்தக்கதென ஊடக அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.அத்துடன் இச்சம்பவம் தொடர்பினில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அவை வலியுறுத்தியுள்ளன.
ஏற்கனவே இலங்கையினில் கடந்த காலங்களினில் 41 தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமலோ ஆக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவங்கள் தொடர்பினில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் ஊடக அமைப்புக்கள் வலியுறுத்திவருகின்ற போதும் இலங்கை அரசு மௌனம் காத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.