பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு கோரி இரணைதீவு மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வரும் நிலையில், அம்மக்களின் வாழ்வாதார வளங்கள் திருடப்பட்டு வருவதாக சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சென்று பாரத்த பின்னர், ஊடகங்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
”இரணைத்தீவு மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு அரசியல் எல்லைகளை கடந்து சகல அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும். ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கக்கூடிய தொழில் முறைகள் மிக நீண்ட காலமாக இரணைத்தீவில் காணப்பட்டு வந்துள்ளது. அத்தோடு அங்குள்ள மக்களின் கால்நடைகள் தற்போது திருடப்பட்டு வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. மக்களின் காணிகளில் பறிக்கப்படுகின்ற தேங்காய்கள், வீட்டு உபகரணங்கள் என்பன தீவில் இருந்து கடத்தப்படுகின்றன என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரணைதீவுக்குச் சொந்தமான எங்களை அனுமதிக்க மறுக்கும் கடற்படையினர் திருட்டு கும்பல்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் என மக்களால் குற்றம் சுமத்தப்படுகிறது. எனவே இம் மக்களுக்கு தமது சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழல்நிலைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.
தாங்கள் தங்களின் சொந்த நிலத்திலேயே நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என இரணைதீவில் வசிக்கும் முதியவர்கள் தெரிவிக்கின்றனர். மிக நீண்ட காலமாக இரணைத்தீவில் வாழ்ந்த மக்களில் சிலர் தங்களின் நிலத்தை கத்தோலிக்க குருமார்களிடம் கையளித்த சான்றிதழ்களை கூட தற்போதும் வைத்திருக்கின்றனர். எனவே இரணைத்தீவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு உரிய தீர்வை அரசு விரைவாக வழங்கவேண்டும்’ என்றார்.