“புது அரசமைப்பையே நாம் தயாரிக்கின்றோம்” என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “ஒற்றையாட்சி என்ற பதத்தை யாரும் எதிர்க்கவில்லை” என்றும் குறிப்பிட்டார். இளம் பிக்குகள் ஒன்றியத்தின் தேரர்கள் குழுவினருடன், அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அதில் பங்கேற்றிருந்த தேரர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாகக் கேள்வியெழுப்பிய தேரர் ஒருவர், “அரசமைப்பில், திருத்தம் செய்யப்படவுள்ளது. இந்த அரசமைப்பு திருத்தத்தின் ஊடாக, பௌத்தத்துக்கு இதுவரையிலும் இருக்கின்ற இடம் இல்லாமற் செய்யப்படும் என்றும், நாட்டின் ஒன்றையாட்சிக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. இவை தொடர்பில், அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?” என, வினவினார்.
அக்கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
“புதிய அரசமைப்புத் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒற்றையாட்சி என்ற பதத்தை எவரும் எதிர்க்கவில்லை. அதேபோல, பௌத்த மதத்துக்கு இருக்கின்ற முன்னுரிமையை யாரும் எதிர்க்கவும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், பௌத்தத்துக்கான முன்னுரிமை அவ்வாறே இருக்கவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நானும் இதனையே வலியுறுத்தியுள்ளோம். அதேபோல பௌத்ததுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதுடன், ஏனைய மதங்களுக்கு எவ்விதமான பாகுபாடும் காட்டாமல் நடவடிக்கை எடுப்பதே எங்களுடைய நோக்கமாகும்” என்றார்.