தமிழ் மக்கள் பேரவை உதயமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் பேரவையின் சாதனைகள் மகத்தானவை.
அதில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக் கொண்டமைதான் தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சிக்கும் சாதனைக்கும் மூலகாரணம் எனலாம்.
மக்கள் இயக்கமாக மலர்ந்த தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் உரிமை - நலன் - அபிவிருத்தி என்ற வகையில் தனது வகிபங்கை விரிவுபடுத்தி வருகின்றது.
எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தியதன் ஊடாகவும் கிழக்கில் மாபெரும் முத்தமிழ் விழாவை எழுச்சியுடன் செய்து முடித்ததாலும் வடக்கு கிழக்கு உறவு பலப்பட்டதுடன் இரண்டு மாகாணங்களும் இணைந்து தமது பலத்தைப் பன்மடங்காக்கியுள்ளன.
அதிலும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களே கிழக்கு மாகாணத்தினதும் தலைவர் என்று கிழக்கு மாகாணத்தின் தமிழ் உறவுகள் கூறிக்கொள்ளு மளவில், வடக்கு கிழக்கு மாகாணம் தமிழ் உறவுகளால் இணைந்து கொண்டது என்றால் அதற்கு வித்திட்ட சாதனை தமிழ் மக்கள் பேரவையையே சாரும்.
நிலைமை இதுவாக இருக்கையில், அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற கொள்கை தமிழ் மக்கள் பேரவையிடம் இருப்பது தமிழ் மக்க ளுக்குச் சாதகமானதல்ல என்பதைக் கூறித் தானாக வேண்டும்.
எனினும் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியைக் காப்பாற்றுவதென்பதும் கட்டாயமானதாகும்.
அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே தமிழ் மக் களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற கருத்துக்கு நாம் உடன்பாடல்ல. அரசியலில் ஈடுபடாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி எத்தனையோ பணிகள் நம் மண்ணில் நடந்தாகின்றது.
இதற்கு தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள எங்கள் தமிழ் உறவுகள் பேருதவி புரிந்து வருகின்றனர்.
எனினும் அரசியலால் நிர்ணயிக்கப்படுகின்ற முக்கியமான விடயங்கள் உண்டு என்பதையும் நாம் இவ்விடத்தில் அடியோடு நிரா கரித்துவிட முடியாது.
தமிழ் அரசியல் களத்தை; அரசியல் தலை மையை பொருத்தமற்றவர்கள் கைப்பற்றி வைத்திருக்கும்போது நிலைமை மோசமாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ் மக்கள் எவ்வளவுதான் உணர்வுபூர்வமாக இருந்தாலும் அரசியல் ரீதியில் நாங்கள் ஏமாற்றப்பட்டு விடுவோம்.
எனவே அரசியல் என்ற விடயத்தை தமிழ் மக்கள் கவனிக்காமல் விடுவதென்பது மிகப்பெரும் வரலாற்றுத் தவறாகும்.
அரசியலில் ஈடுபடாமல் இருப்பதென்பது வேறு. அரசியலை வழிப்படுத்து; நெறிப்படுத்துவதென்பது வேறு.
தமிழகத்தில் தந்தை பெரியார் அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் தமிழகத்தின் ஆட்சியை யார் செய்ய வேண்டும் என்பதைப் பெரியாரே தீர்மானித்தார்.
இதுபோலத்தான் தமிழ் மக்கள் பேரவை அரசியலில் ஈடுபடாமல் விட்டாலும் தமிழ் மக் களுக்காக; தூய்மையான, நேர்மையான, விசுவாசமான அரசியலை நிர்ணயிக்கின்ற பெரும் பணியை தமிழ் மக்கள் பேரவை செய்ய வேண்டும்.
அதற்கான வழிமுறைகள் பற்றி எங்கள் தமிழ் மக்களுடன் கூடி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.