வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாபெரும் சக்தியாக வளர்ந்துவருவதை அனுமதிக்கக்கூடாதென்ற கூட்டு புரிந்துணர்வின் அடிப்படையிலேயே முன்னணியை வீழ்த்த தமது ஆதரவு வழங்கப்பட்டதாக ஈபிடிபி அறிவித்துள்ளது.
யாழ்.மாநகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபைகளை தொடர்ந்து பருத்தித்துறை நகரசபைக்கான ஆட்சிப் பொறுப்பை ஈபிடிபி கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னகப்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முழுமையாக வெற்றிகொண்ட ஊர்காவற்றுறை பிரதேச சபையை தவிர்ந்த ஏனைய சபைகளில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களைப் பெறாத நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு குறித்த சபைக்கான நகரபிதா தெரிவு நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தத்தமது சார்பில் போட்டியிடும் பிரதிநிதிகளை முன்மொழிந்திருந்தன.
15 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த நகரசபையில் 6 ஆசனங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் 5 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் 2 ஆசனங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தலா ஒவ்வொரு ஆசனங்களை தமிழர் விடுதலைக் கூட்டணியும் சுயேட்சைக் குழுவும் பெற்றிருந்தன.
இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த சபைக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிக்கு ஈபிடிபி வெளிப்படையான ஆதரவை வழங்கிய நிலையில் குறித்த சபைக்கான ஆட்சி அதிகாரத்ததை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது.
இது தொடர்பில் டக்ளஸ்-மாவை-சுமந்திரன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு நடத்திய கூட்டு நகர்வையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இனிவருங்காலங்களில் இயலுமான வரை கூட்டமைப்பினை விமர்சிப்பதை தவிர்க்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.