மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஜனாதிபதிக்கு இந்த கடிதத்தை அகிம்சா விக்ரமதுங்க எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை.
இலங்கையின் அரசமைப்பை பின்பற்றுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமே நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள்.
இவர்கள் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டார்களா என்பது எனக்கும் தெரியாது உங்களிற்கும் தெரியாது, நீங்கள் இடமாற்றுவதற்கு முன்னர் நிசாந்த சில்வா மேற்கொண்ட ஓய்வற்ற குற்றவியல் விசாரணைகளின் அடிப்படையில் இதனை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை ஒரு சாட்சி என்ற அடிப்படையில் கேள்விகளுக்கு உண்மையான முழுமையான பதிலை வழங்குவது முக்கியமான விடயம்.
தேசத்தின் தலைவர் என்ற அடிப்படையில் உங்களை பொறுத்தவரை தனிப்பட்ட உறவுகள் அரசியல் தேவைகள் உங்கள் மனவிருப்பங்களை விட சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது முக்கியமானது.
உங்களை பொறுத்தவரை விசாரணையாளர்களிற்கு வளங்களை வழங்குவது அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவதும் முக்கியமானது.
இவற்றிற்கு அப்பால் நிசாந்த சில்வா போன்று அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதன் மூலம் உரிய மரியாதை கிடைக்கும். தண்டனை கிடைக்காது என்பதை நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்துவது உங்கள் பணியாகும்.
எனக்கு இலங்கையின் குற்றவியல் விசாரணை பிரிவினர் மற்றும் சுயாதீன அமைப்புகளான தேசிய பொலிஸ் ஆணைக்குழு அரசமைப்பு பேரவை மீது முழு நம்பிக்கையுள்ளது.
அவர்கள் உங்களை வெளிப்படையான அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட அனுமதிக்கமாட்டார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் சில பாரிய குற்றச் செயல்கள் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் விசாரணைகளை நடத்தி வந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இடமாற்றம் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



