தனது தம்பி உட்பட கட்சித் தோழர்கள் பலரும் காணாமற்போயுள்ளனர். இவர்களைப் பற்றிய விவரங்களை தானும் தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனத்தெரிவித்துள்ளார் காணாமல் போதல் சம்பவங்களின் சூத்திரதாரிகளுள் முக்கியமானவரான டக்ளஸ் தேவானந்தா.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகள் போராட்டங்கள் காரணமாக எமது இளைஞர் யுவதிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அவற்றில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சில தமிழ் அரசியல்வாதிகள் முறையிட்டு வருகின்றனர். இது தொடர்பில் நாம் அரசாங்கத்திடம் எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்திருந்தோம். அதுமட்டுமல்லாது, பிரதமர் ரணில் விககிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போது, யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நேரடியாகவும் கேட்டிருந்தோம். அப்போது அப்படியேதும் இரகசிய முகாம்கள் இல்லையென்ற பதிலே எமக்குக் கிடைத்தது. மேலும் இவ் விடயம் தொடர்பில் நாம் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போது இதற்கு பதில் அளிப்பதற்கு இருவாரகால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் பதில் கிடைக்குமென நம்புகின்றேன்.
தடுத்துவைக்கப்பட்டுள்ளோரது விவரங்கள் சரிவரத் தெரியாத காரணத்தினால், அவர்களைப் பிரிந்துள்ள உறவினர்கள் பெரும் துயரங்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்கியுள்ளனர். அதேநேரம், தங்களது உறவுகள் காணாமற்போயுள்ள நிலையில் அவர்களைப் பற்றிய தகவல்களைத் தேடியலையும் எமது உறவுகளும் மேற்படி விவரங்களை எதிர்பார்த்த நிலையில் உள்ளனர்.
எனது தம்பி உட்பட எனது கட்சித் தோழர்கள் பலரும் காணாமற்போயுள்ளனர். இவர்களைப் பற்றிய விவரங்களை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விவரங்களை வெளியிடுவது பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு பெரிதும் பயனாக அமையும். இதனை அவதானத்தில் கொண்டு அரசாங்கம் தடுத்துவைக்கப்பட்டுள்ளோரது விவரங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்று கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற பல கைது மற்றும் கடத்தல்களின் பின்னணியினில் டக்ளஸ் தலைமையிலான ஈபிடிபி இருப்பதாக தொடர்ந்தும் குற்றம் சாட்டப்பட்டுவருவது தெரிந்ததே.
Add Comments