யாழ்.வலிகாமர் வடக்கில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆலயவழிபாட்டுக்கு அனுமதி

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடுவதற்கு 25 வருடங்களின் பின்னர் இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை குறித்த வைரவர்ஆலயத்தில் வைகாசி விசாகமடை அனுஷ்டிக்கப்பட்ட உற்சவத்திற்கு செல்வதற்காகவே படையினர் அனுமதித்தனர்.

இராணுவத்தின் இவ் அனுமதியளிப்பினை வலி. வடக்கு மீள்குடி யேற்றக்குழுவின் தலைவர் எஸ். சஜீவன் பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று காலை 8 மணியளவில் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கூடிய பொதுமக்கள் இராணுவத்தின் அனுமதிக்காக காத்திருந்தனர்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதி கிடைத்தவுடன் பெருமளவிலான மக்கள் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு பொங்கல் நிகழ்வுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

25 வருடங்களின் பின்னர் தமது குலதெய்வமான ஞான வைரவர் ஆலயத்தை பார்த்தவுடன் கண்ணீர் மல்கிய நிலையில் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

குறித்த ஆலயம் பற்றைகளால் சூழப்பட்ட நிலையில் காணப்பட்டிருந்ததோடு ஆலயத்தை சூழவும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இராணுவ பிரசன்னமும் காணப்பட்டிருந்தது.

ஆலய வளாகத்துக்கு வெளியே யாரையும் அனுமதிக்காத இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை மக்கள் குறித்த ஆலயத்திற்குச் சென்ற போதிலும் அங்கு செய்தி சேகரிப்பிற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் உள்ளே செல்வதற்கு இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனால் ஒருசில ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.பின்னர் அங்கு காத்து நின்று இராணுவத்துடன் முரண்பட்ட ஊடகவியலாளர்கள் மட்டும் உயர் அதிகாரிகளின் அனுமதியின் பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.    
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila