விசாரணைக்குழுவிற்கு சாட்சியம் அளிக்க வந்தவர்களில் சிலருக்கு மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

விசாரணைக்குழுவிற்கு சாட்சியம் அளிக்க வந்தவர்களில் சிலருக்கு மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

 யாழில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவிற்கு சாட்சியம் அளிக்க வந்தவர்களில் சிலருக்கு அவர்களின் உறவினர்கள் மரணித்து விட்டார்கள் என கூறி மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன.

குறித்த மரண சான்றிதழ்கள் தமக்கு கட்டாயப்படுத்தியே கொடுக்கப்பட்டதாகவும் ஆனாலும் தாம் தொடர்ந்து தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்கள் என நம்புவதாகவும் சாட்சியம் அளித்தனர். கோண்டாவில் வடக்கு, கோண்டாவிலை சேர்ந்த காந்தி யாழினி என்பவர் சாட்சியம் அளிக்கையில்,

அல்லைப்பிட்டி பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது அல்லைப்பிட்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற எனது கணவரான செல்வானந்தம் காந்தியை 2006ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ம் திகதி அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர்.

அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் எனது கணவரை கைது செய்து வைத்திருந்த போது பலர் கண்டிருந்தனர் . பின்னர் கணவர் காணாமல் போய்விட்டார். அதன் பின்னர் பொலிஸ் நிலையம் கடற்படை முகாம் என பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை.

தற்போது எனது கணவர் இறந்துவிட்டார் என கூறி மரண சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நான் தொடர்ந்து நம்புக்கின்றேன் எனது கணவர் உயிருடன் இருக்கின்றார் என. எனவே அவரை மீட்டு தாருங்கள் என கோரினார்.


புதிய சோனக தெருவை சேர்ந்த ஒருவர் சாட்சியம் அளிக்கையில்,

எனது அண்ணனான சுல்தான் முஹைதீன் குனைஸ் என்பவர் இந்திய அமைதிப்படை காலத்தில் 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ம் திகதி முதல் காணாமல் போனார். அதன் பின்னர் அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை. 2005ம் ஆண்டின் 17ம் இலக்க இறப்புக்கள் பதிவு சட்டத்தின் பிரகாரம் காணாமல் போய் ஒரு வருடம் கடந்து விட்டமையால் இறந்தவராக கருதப்படுகின்றார் என கடந்த 2008 ம் ஆண்டு யூலை 8ம் திகதி எனது அண்ணன் காணாமல் போன தினத்தன்று அவர் இறந்து விட்டார் என  மரண சான்றிதழ் வழங்கியுள்ளார். ஆனால் எனது அண்ணின் உடலை கண்ணால் யாரும் காணாததால் அவர் உயிருடன் இருக்கின்றார் என நம்புகின்றேன் என தெரிவித்தார்.

கோண்டாவில் வடக்கை சேர்ந்த துரைராசா மகேஸ்வரி சாட்சியம் அளிக்கையில், எனது மகன் துரைராசா சிவகுமார் (காணாமல் போகும் போது வயது 21) 1996ம் ஆண்டு யாழ்.நகர்பகுதியில் வைத்து காணாமல் போனார். மகன் காணாமல் போனமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் , பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் என பலர் என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் எனது மகன் இறந்துவிட்டார் என மரண சான்றிதழ் தந்துள்ளனர். ஆனால் எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என நம்புகின்றேன் அவரை மீட்டு தர வேண்டும் என கோரினார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila