1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புத்தூர் பகுதியில் 2 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைக் குற்றச்சாட்டில் அந்தக் காலப்பகுதியில் சிறுப்பிட்டி இராணுவ முகாமில் கடமையாற்றிய லெப்ரினன்ட் தரத்தை சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட 16 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாண நீதிவான் மன்றில் அச்சுவேலிப் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் அந்தக் காலப் பகுதியில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த னர். அத்துடன் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 பேருக்கும் எதிராகக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்டமா அதிபரின் ஆலோ சனைகள் யாழ்ப்பாண நீதிவான் மன்றுக்கு வழங்கப்பட்டது. 16 இராணுவத்தினருக்கும் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டது. அவர்களில் இரண்டு இராணுவத்தினர் சாவடைந்துவிட்டனர் என்று மன்றுக்கு அறிவிக்கப்பட் டது. மிகுதி 14 இராணுவத்தினரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாண நீதிவான் மன்றினால் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். எனினும் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்தி லிருந்து இந்த இராணுவத்தினருக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று குறிப்பிட்டு இன்னொரு அறிவுறுத்தல் யாழ்ப்பாண நீதிவான் மன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைக் காரணம் காட்டி இராணுவத்தினர் சார்பில் கோரப்பட்ட பிணை மனுவும் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றம் நிராகரித்து அவர்களின் விளக்கமறியலை நீடித்தது. பின்னர் 14 இராணுவத்தினரின் சார்பில் அவர் களது உறவினர்களால் யாழ்ப்பாண மேல் நீதி மன்றில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. 14 இராணுவத்தினரில் 5 பேருக்கு பிணை வழங்கப்பட்டது. ஏனையோர் தொடர்ந்தும் விள க்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்.இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் நேற்று அழைக்கப்பட்டது. இராணுவத்தினர் பொலிஸாரின் பாதுகாப்புடன் அனுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அச்சுவேலி பொலிஸார் இந்த வழக்குத் தொடர்பான மேலதிக அறிக்கையை மன்றில் முன்வைத்தனர். “வழக்குத் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோ சனை கிடைத்துள்ளது. அதில் 10 இராணுவத்தினரை வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய ஆறு இராணுவத்தினர் தொடர்பாக ஆலோசனை கிடைக்கப்பெற வில்லை. அவர்கள் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் விடுவிக்குமாறு கூறப்பட்ட 10 இராணுவத்தினரில் ஒருவரும் ஏனைய 6 இராணுவத்தினரில் ஒருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். அதனால் 9 பேர் நேற்று வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். ஏனையவர்களான 4 இராணுவத்தினரின் விளக்கமறியலை எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் கட்டளையிட்டார். இதேவேளை, தற்போது விளக்கமறியல் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ள அறுவரில் ஒருவர் லெப்ரினன்ட் கேணல் தரத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி. இன்னொருவர் ஏற்கனவே சாவடைந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான வழக்கேடும் ஏனைய ஆவணங்களும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னரே காணாமல் போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்குத் தொடர்பான நடவடிக்கைகளை முன் னெடுப்பதில் அச்சுவேலி பொலிஸார் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் தங்கியிருக்க வேண்டி யுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. |
இரு இளைஞர்களை கொலை செய்த வழக்கில் இருந்து 9 இராணுவத்தினர் விடுவிப்பு!
Related Post:
Add Comments