நாட்டில் போர்க்குற்றமே நடைபெறவில்லை. ஆகவே போர்க்குற்ற விசாரணையும் தேவையில்லை என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவ்வாறு போர்க்குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும் என்றால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களை யார் விசாரணை செய்வது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு நேற்று முன் தினம் இரண்டு நாள் விஜயமாக வருகை தந்துள்ள சுகாதார அமைச்சர், நேற்றைய தினம் காலை பத்து மணியளவில் யாழில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில்,
ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுகாதார அமைச்சரிடம், இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகளை ஏற்க தயாரா? என ஊடகவியலா ளர்களினால் கேட்கப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அங்கு கூறுகையில்,
இலங்கையில் போர்க்குற்றம் என்று ஒன்றும் நடைபெறவில்லை. போர்க்குற்றம் என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவ்வாறு என்றால் யார் குற்ற மிழைத்தது? தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க் குற்றத்தை யார் விசாரணை செய்வது?
ஆகவே இவற்றை விடுத்து நாங்கள் நல்லதொரு தீர்வுக்கு செல்லவுள்ளோம். இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையை பெற்றுக் கொடுக்கவுள்ளோம். இந்த சம உரிமை எப்போதுமே நிலைத்திருக்கும்.
மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவுள்ளோம், போரால் பாதிக்கப்பட்ட இடங்களை அபிவிருத்திகளை முன்னெடுத்து மக்களுடைய வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவுள்ளோம். நாட்டில் சிங்கள மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் தமிழ், முஸ்லிம் மற்றும் அனைத்து இனங்களுக்கும் வழங்கி வருகிறோம்.
இதன்மூலம் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை கொண்டுள்ளார்கள். இதுதான் எங்களுடைய சாதனை, கடந்த காலங்களை நாங்கள் நினைவு படுத்தவில்லை என அமைச்சர் ராஜித பதில ளித்துள்ளார்.