முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் அடிப்படையிலான திட்டத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தற்போது தமிழர் தாயகப் பகுதியில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நிலையில், அத்தகைய திட்டமேதும் அரசிடம் இருப்பின் அரசு அதனைக் கைவிட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தாவும் கேட்டுள்ளாராம். மகாவலி அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கருணாநிதி பாணியில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கில் மணலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திலாவது தமக்கான காணிகள் கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தும், அதிலும் பாரிய ஏமாற்றமே எமது மக்களுக்குக் கிடைத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில், கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளில் வாழ்ந்திருந்திருந்த நிலையில், யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களது சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு, பின்னர் அம் மக்கள் மீள்குடியேறிய நிலையில் அவர்களுக்கு வேறு இடங்களில் விவசாய செய்கைக்கு உதவாத சில காணிகளே வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இம் மக்கள் வாழ்வாதார ரீதியாகத் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையே தொடர்கின்றது.
தற்போது மேற்கொள்ளப்படவுள்ள டீ வலது கால்வாய் திட்டமானது கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு பகுதியை உள்ளடக்கும் நிலையில், அங்குள்ள காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மல்வத்து ஓயா கீழ்ப் பகுதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வவுனியா செட்டிக்குளம் பகுதி வாழ் மக்களது குடிபரம்பல் சிதைக்கப்படாமல் அத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது காணிகள் இல்லாது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழந்து வருகின்ற வவுனியா தெற்கு, செட்டிக்குளம் பகுதிகளிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கும் இத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது, முல்லைத்தீவு மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற மகாவலி அபிவிருத்தித் திட்டங்களிலும் தமிழ் மக்களே குடியேற்றப்பட வேண்டுமேயொழிய, அங்கு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களைப் புகுத்தக் கூடாது. எமது மக்கள் காணி, நிலங்கள் இன்றியும், சொந்தக் காணி, நிலங்களை படைகளிடம் பறிகொடுத்தும் இருக்கின்ற நிலையில், சிங்களக் குடியேற்றங்களை வலிந்து புகுத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எமது மக்களின் மனங்களைப் புண்படுத்துகின்ற இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு ஒருபோதும் துணை நிற்காது. எனவே, அத்தகைய திட்டங்கள் இருப்பின் அதனை உடனே கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டக்ளஸ் கோரியுள்ளராம்.