திருகோணமலை – நிலாவெளி, 8 ஆம் கட்டை பகுதியில் காணி அளவீடுகளில் ஈடுபட்டிருந்த நில அளவையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
நில அளவைப் பணிகளை மேற்கொள்வதற்காக நில அளவையாளர்கள் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.
அக்காணியில் கடந்த 50 வருடங்களாக பயிர் செய்கையில் தாம் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
எனினும், அக்காணியை அரச காணியென தெரிவித்து நில அளவையாளர்கள் அளவீடுகளில் ஈடுபட்டதாக மக்கள் குறிப்பிட்டனர்.
காணி உறுதி தம்மிடம் உள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.
அமைதியின்மை நிலவிய இடத்திற்கு சென்றிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாகத் தெரிவித்ததன் பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து சிரேஷ்ட நில அளவையியலாளர் ஏக்கநாயக்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
தமக்கு இதுபற்றி முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.