எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடினோமோ, அதே படையினரைப் பொதுப்பணிகளில் நாம் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்காகவே அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
|
கோண்டாவில் ஸ்ரீ நாராயணா சனசமூக நிலையத்தின் 66 ஆவது ஆண்டுவிழா நிலைய முன்றலில் நேற்று நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது-
''வடக்கு மாகாணத்தில் பொதுமக்கள் செய்ய வேண்டிய பொதுப்பணிகளுக்கெல்லாம் இராணுவத்தைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சனசமூகநிலையங்கள் சமூகப்பணிகளில் போட்டிபோட்டு ஈடுபட்டகாலம் ஒன்று இருந்தது. வீதிகளைச் சுத்தம் செய்வது, பொதுக் கிணறுகளையும் பூங்காக்களையும் பராமரிப்பது, குளங்களைத் தூர்வாருவது என்று சனசமூகநிலையங்கள் அவை அமைந்திருக்கும் கிராமங்களில் பொதுப்பணிகளை முன்னெடுத்து வந்துள்ளன.
போராட்ட காலத்தோடு இந்தப் பணிகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் கையில் எடுத்தன. இப்போது அந்தச் சேவைகளில் இராணுவம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இராணுவம் அவசர நிலமைகளின் போது இடர்முகாமைத்துவங்களில் ஈடுபடுத்தப்படுவது உலக நடைமுறை. ஆனால் இங்கு இராணுவம் பொலித்தீனும் அல்லவா பொறுக்குகின்றது. நாங்கள் செய்ய வேண்டிய பணிகளில் எல்லாம் இராணுவத்தை நுழைய விடுவோமானால் ஊர்கூடித் தேர் இழுக்கும் பெருமையைக் கொண்டுள்ள நாங்கள், கடைசியில் இராணுவம் கூடித் தேர் இழுத்த சிறுமைக்கு ஆளாக வேண்டிவரும்.
இராணுவத்தைப் பொதுப்பணிகளில் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக எமக்குப் பாதகமானது.இராணுவம் வெளியேற வேண்டும், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் ஒருபுறம் போராடிக்கொண்டு, இன்னொரு புறம் இராணுவத்தைச் சமூக சேவைக்கும் அழைப்பது ஒன்றுக்கொன்று முரணானது. ஒருபோதும் ஏற்புடையதாகாது.
இந்த நடைமுறையை அனுமதித்தால் இராணுவம் தமிழ்மக்கள் மீது கரிசனையாக உள்ளது, படையினரும் தமிழ் மக்களும் இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று அரசோடு சேர்ந்து நாமும் பன்னாட்டுக்குச் சொன்னவர்கள் ஆவோம் – என்றார்.
நிகழ்வில் பொ.ஐங்கரநேசனின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் இருந்து 30 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.
|
படையினரைப் பொதுப்பணிகளில் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்கு! - ஐங்கரநேசன்
Related Post:
Add Comments