வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையில்; தொடர்ந்தும் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபியும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளது. முன்னதாக வடமராட்சி கிழக்கில் அனுமதியற்று ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் போராடிவந்திருந்தனர்.
அவர்களது போராட்டத்தின் எதிரொலியாக மணல் கொள்ளைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தம்மை மீண்டும் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபி ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சுமார் 15 பேர் வரையிலான ஆட்களை கொண்ட குழு ஒன்று மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பதாக இவ்வார்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எவரும் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர்களல்ல எனவும் வெளியிலிருந்து கொண்டு சென்று இறக்கப்பட்டவர்கள் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
வடமராட்சி கிழக்கில் மணல் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மகேஸ்வரி நிதியமே ஈபிடிபி கட்சிக்கு பெருமளவு பணத்தை ஈட்டிக்கொட்டும் அமைப்பாக இருந்து வந்தது.
இதனிடையே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் நெய்தல் எனும் நிறுவனமும் தொடர்ந்தும் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.