
இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதி பொறிமுறைகைளை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன, இந்த நிலையில், இலங்கை யுத்தக்குற்ற விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் மிக முக்கியமான நாடு என்பதோடு, சர்வதேச ரீதியில் செல்வாக்கு மிகுந்த நாடாகவும் திகழ்கின்றது. இந்நிலையில் இலங்கையில் பொது மக்களுக்கு எதிராக அநியாயங்கள் நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அதனை தடுத்திருக்க வேண்டும். அது இந்தியாவின் கடமையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் இறையாண்மை என்பதும் அதுவே எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு நாடும் தமது குடிமக்களை காப்பாற்ற வேண்டுமென்பதோடு, அதனை செய்ய குறித்த நாடுகள் தவறும் பட்சத்தில் நட்பு நாடுகள் தலையிட்டு பொது மக்களை காப்பாற்ற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மிகத் தெளிவான சர்வதேச சட்டங்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தியா இந்த விடயத்தில் தவறிழைத்துள்ளதாகவே தான் கருதுவதாகவும் கூறியுள்ளார்.
இந்தியா தலையிட்டு சமரசத்தை ஏற்படுத்தியிருந்தால், 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் எனவும், தென்னாபிரிக்கா போன்று அது உள்நாட்டு பிரச்சினை என இந்திய தெரிவித்திருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
40 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுவது உள்நாட்டு பிரச்சினை அல்லவெனவும் அது சர்வதேச விவகாரம் எனவும் அவர் இந்த செவ்வியின்போது மேலும் தெரிவித்துள்ளார்.