யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்த கூட்டமைப்பின் பங்காளிகளான புளொட் மற்றும் டெலோ முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.இதற்கு ஏதுவாக பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
இந்தப் பொது அணியில் சமூக அமைப்புகள், தமிழ் கட்சிகள் சில, வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்துள்ளன எனவும், அவர்களின் ஆதரவுடனேயே வித்தியைக் களமிறக்க பேச்சுகள் இடம்பெறுகின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கு தற்போது பேச்சுகள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம் பெற்றிருந்தன.ஆனால் அதனை அவர் நிராகரித்துள்ளார்.
அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் பின்னணியில் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனையே நியமிக்வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரனை மேயர் வேட்பாளராக களமிறக்க, தமிழரசு கட்சிக்குள் ஏற்கெனவே பேச்சுகள் இடம்பெற்றவேளை, மைத்துனரான ஈ.சரவணபவன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் , அவரை நிறுத்தவேண்டாமென, மாவை சேனாதிராஜாவிடமும் நேரில் தனது எதிர்ப்பை கூறியிருந்தனர் என்றும் அறியமுடிகின்றது.